மெக்சிகோவில் மின் கம்பங்களில் கட்டிவைக்கப்பட்ட திருடர்கள் ; வைரலாகும் புகைப்படம்
மெக்சிகோ நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தின் லாகோஸ் டி மொரேனோ நகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் சிலர் மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, மின்சாரக் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த சம்பவத் தில் அவர்களது உடல் டேப்பால் ஒட்டப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது. ஜாலிஸ்கோவின் பல பகுதிகளில் இது போன்று மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள், டேப் மூலம் கட்டி வைக்கப்பட்ட நிலையில் கண் டறியப்பட்டனர்.

இதையடுத்து சமூக ஊடக வாசிகள், லாகோஸ் டி மொரேனோவின் பேட்மேன் என்று அறியப்படும் மர்மமான நபர் ஒருவரை வைரலாக்கியுள்ளனர். அவர் தான் இந்த திருடர்களைக் கண்டறிந்து கட்டி வைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மாகாண அதிகாரிகள் தீவிர விசாரணை
அந்த மர்ம நபருக்கு உடனடியாக 'பேட்மேன்' என்ற புனைப்பெயரைச் சூட்டினர். பொது இடங்களில் ஆண்கள் டேப் மூலம் கட்டி வைக்கப்பட்டிருப்பதையும், சில சமயங்களில் அவர்கள் திருடியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு அருகிலேயே அவர்கள் கட்டி வைக்கப் பட்டிருப்பதையும் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாயின.
இதுதொடர்பாக, ஜாலிஸ்கோ மாகாண அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற முதல் சம்பவம் கடந்த ஜூன் 13-ம் தேதி நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜூன் 17, 19 ஆகிய தேதிகளில் இதேபோன்ற சில சம்பவங்கள் பதிவாயின.
டேப்பால் கட்டி வைக்கப்பட்ட நபர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா அல்லது தவறாக குற்றம்சாட்டப்பட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பாகவும் ஜாலிஸ்கோ மாகாண அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.