இந்தியா – ஈரான் நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு ஆபத்து!
போலி சமூக வலைதள கணக்குகளால் இந்தியா – ஈரான் நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு ஆபத்து என்று இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போரின் போது, ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது B2 வகை குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்காக இந்திய வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரபரப்பட்டன.
இதனிடையே, இந்தியாவுடனான உறவை சீர்குலைக்கும் விதமாக, போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் அவதூறுகள் பரப்பப்படுவதாக இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதவேளை, சில போலி கணக்குகளின் விபரங்களை தங்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரான் இராணுவம் மற்றும் அமைச்சகங்களின் பெயரில், அதிகாரப்பூர்வ பக்கங்களைப் போல தோற்றமளிக்கும் விதமாக, ப்ளூ டிக்குடன் போலி கணக்குகளின் மூலம் அவதூறு பரப்பப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரான் அரசு பெயரில் ப்ளூ டிக்குடன் இருக்கும் ஒரு போலி கணக்கில், ‘அமெரிக்க B2 வகை குண்டுகளை வீசும் விமானங்கள் ஈரானைத் தாக்குவதற்காக, இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியது தெரியவந்த பின்னர், ஈரான் இந்தியாவுடனான சபஹார் துறைமுகம் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்கிறது,’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரான் – இந்தியா இடையிலான நட்புறவை கெடுக்கும் விதமாக, பல போலி சமூக வலைதள கணக்குகள் ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குகளைப் போல சித்தரிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த போலி கணக்குகள் ஈரானுக்கு சொந்தமானவை அல்ல என்றும் ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.