எப்ஸ்டீன் விவகாரம் மீண்டும் சூடுபிடிப்பு ; அதிரடியில் இறங்கிய அமெரிக்க நீதித்துறை
அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான 30 இலட்சத்திற்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள ஆவணத்தில் 2,000க்கும் அதிகமான காணொளிகள் ,180,000க்கும் அதிகமான புகைப்படங்கள் என்பன உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட 'எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்' (Epstein Files Transparency Act) கீழ் இந்த ஆவணங்கள் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆவணங்களை வெளியிடுவதற்கான காலக்கெடு கடந்த டிசம்பர் 19 ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தது. சுமார் ஆறு வாரங்கள் தாமதமாகவே இவை தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
மில்லியன் கணக்கான ஆவணங்களை ஆய்வு செய்து, அதில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைக்க வேண்டிய (Redaction) பாரிய வேலைப்பளு இருந்தமை மற்றும் நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் மற்றும் எப்.பி.ஐ (FBI) அதிகாரிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தமையே இந்த தாமதத்துக்கு காரணம் எனக் கூறப்படுகின்றது.
இதற்கு முன்னர் வெளியான ஆவணங்களில் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த பல உயர்மட்டப் புள்ளிகளின் புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வெளியாகியிருந்தன.

தற்போதைய வெளியீட்டில் எப்ஸ்டீனின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள், பயணப் பதிவுகள் (Flight Logs) மற்றும் அவரது கூட்டாளியான கிஸ்லேன் மெக்ஸ்வெல் (Ghislaine Maxwell) தொடர்பான மேலதிக தகவல்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆவணங்களில் ஒருவரது பெயர் இடம்பெறுவது, அவர்கள் ஏதோ ஒரு தவறு செய்தார்கள் என்பதைக் குறிக்காது என்று நீதித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட பல முக்கிய நபர்கள் எப்ஸ்டீனுடனான தவறான தொடர்புகளை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.