எரிபொருள் போக்குவரத்து பாதையில் புதிய பதற்றம் ; அமெரிக்காவை நிராகரித்த ஈரான்
உலக அளவில் எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை சர்வதேச கடல் பகுதி அல்ல என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்ஷி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்ஷி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஹோர்முஸ் நீரிணை என்பது சர்வதேச கடல் பகுதி கிடையாது. அது ஈரானுக்கும் ஓமானுக்கும் சொந்தமான, இரு நாடுகளாலும் பகிரப்பட்ட ஒரு கடல் பகுதியாகும்.

இது அமெரிக்காவின் எல்லையிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது. இந்த பிராந்தியத்தின் கடல்சார் எல்லைகள் மிகவும் தெளிவானவை." குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையின் மிகக் குறுகிய பகுதியானது வெறும் 21 கடல் மைல் அகலத்தைக் கொண்டது மாத்திரமே. இதனால், இந்த நீரிணை முழுமையாக ஈரான் மற்றும் ஓமான் நாடுகளின் பிராந்திய கடல் எல்லைக்குள்ளேயே அமைகின்றது.
இந்த சட்ட ரீதியான அமைப்பின் காரணமாக, இந்த நீரிணை வழியிலான கடல் போக்குவரத்தை முறைப்படுத்தும் முழு உரிமை ஈரானுக்கும் ஓமானுக்கும் மட்டுமே உண்டு என ஈரான் வலியுறுத்துகிறது.
வரலாற்று ரீதியாக இந்த வழித்தடத்தில் கட்டுப்பாடற்ற போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய சட்ட நிலை இதுதான் என ஈரான் சுட்டிக்காட்டுகிறது.
ஈரானின் இந்த விளக்கத்தை அமெரிக்கா முற்றாக நிராகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை என்பது உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஒரு சர்வதேச வழித்தடம் என்றும், அங்கு சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் கண்டிப்பாக உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வாதிட்டு வருகின்றது.
இதன் காரணமாக, இந்த பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.