ஹோர்முஸ் ஜலசந்தியில் புதிய பதற்றம் ; கப்பல் கைப்பற்றப்பட்டதாக தகவல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்த கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டு ஈரானிய கடல் பகுதியை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து ஹோர்முஸ் ஜலசந்தி அருகே புதிய பதற்ற நிலை உருவாகியுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் அமைப்பு (UKMTO) வெளியிட்ட தகவலின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான ஃபுஜைராவிலிருந்து வடகிழக்கே சுமார் 38 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்த கப்பலை “அங்கீகரிக்கப்படாத நபர்கள்” கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

குறித்த கப்பல் பின்னர் ஈரானிய கடற்பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததாக பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சோமாலியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா துறைமுகத்தை நோக்கிச் சென்ற இந்தியக் கொடி ஏற்றப்பட்ட “ஹாஜி அலி” என்ற சரக்குக் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலின் காரணமாக கப்பலில் தீப்பற்றி, பின்னர் ஓமன் கடற்கரைக்கு அருகே அது மூழ்கியதாக கூறப்படுகிறது.
கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளும் ஓமன் கடலோரக் காவல்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஈரானைச் சுற்றியுள்ள பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் ஹோர்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கவலைகள் எழுந்துள்ளன.
இச்சம்பவத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளதுடன், வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.