நோபல் பரிசு வென்ற பொருளாதார வல்லுநருக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!
நோபல் பரிசு வென்ற வங்காளதேசத்தைச் சேர்ந்த 83 வயதான டாக்டர் முகமது யூனிஸுக்கு நீதிமன்றம் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பொருளாதார வல்லுநரான இவர், கிராமீன் வங்கி மூலமாக வறுமை ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக, கடந்த 2006ம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசு வென்றார்.
இந்த நிலையில், இவர் கிராமீன் டெலிகாம் தலைவராக பதவி வகித்தபோது, தொழிலாளர் நல நிதியை உருவாக்கத் தவறியதாக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தொழிலாளர் சட்டத்தை மீறியதாக முகமது யூனுஸ் மற்றும் 3 நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்றைய தினம் (01-01-2024) தீர்ப்பு வழங்கியது.
அப்போது முகமது யூனுஸ் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 6 மாத சிறைத்தண்டனையும், 25,000 டாகா (இலங்கை மதிப்பில் 73798.68 ) அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, தண்டனை பெற்ற 4 பேரும் பிணையில் வர மனு தாக்கல் செய்தனர். மனுவை உடனடியாக பரிசீலனை செய்த நீதிமன்றம், ஒரு மாதம் ஜாமீன் வழங்கியது.
தொழிலாளர் சட்டத்தின்படி, 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் தூண்டுதல் காரணமாக முகமது யூனுசுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.