வடகொரியா தூதர் தப்பியோட்டம்
குவைத் நாட்டுக்கான வடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்த ரியூ ஹியூன் வூ தென் கொரியாவுக்கு தப்பி வந்துள்ளதாக தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகைமை நிலவி வந்தது. ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு பகைமையை தணிந்து இணக்கமான சூழல் உருவானது.
இந்நிலையில் தற்போது மீண்டும் வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் வடகொரியாவை சேர்ந்த அரசு எதிர்ப்பாளர்கள் பலர் அண்டை நாடான தென் கொரியாவுக்கு தப்பி சென்று அங்கு அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.
குவைத் நாட்டுக்கான வடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்த ரியூ ஹியூன் வூ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
எனினும் அவர் எப்படி தென் கொரியாவுக்குள் நுழைந்தார் என்பது பற்றிய விளக்கம் அளிக்கப்படவில்லை.