கனேடிய மாகாணம் ஒன்றிற்கு பணிக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள செய்தி
கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவுக்கு பணிக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது தொடர்பான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆல்பர்டாவில் oilsands என்று அழைக்கப்படும் பகுதிகளில் பணியாற்ற வெளிநாட்டவர்கள் பலர் வருகின்றனர்.
அந்த oilsands எனப்படுவது, தார், களிமண், தன்ணீர் மற்றும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் இணைந்து காணப்படும் பகுதிகள் ஆகும்.
அவற்றை தனித்தனியே பிரித்தெடுக்க பெரிய நிறுவனங்கள் உள்ளன. அப்படி, கனடாவில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு பணி செய்ய வரும் வெளிநாட்டவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முதலான கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த வகையில் விலக்குப்பெற்று பணியாற்றுபவர்கள் எவ்வளவு பேர், அவர்களில் எத்தனை பேர் ஆல்பர்ட்டாவுக்கு பணிக்கு வந்தபின் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் அரசிடம் இல்லை. பெயர் வெளியிட விரும்பாத ஒரு சுகாதாரத்துறை அலுவலர், இவ்வகையில் பணிக்காக ஆல்பர்ட்டாவுக்கு வந்திருப்போர் அமெரிக்கர்கள் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஆல்பர்ட்டா தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவரான Gil McGowan, அமெரிக்க பணியாளர்களை இந்த நிறுவனங்கள் பணிக்கமர்த்தியுள்ளது ஒரு அராஜக செயல் என்று கூறியுள்ளார்.
ஆல்பர்ட்டாவில் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படும் நிலை இருக்கையில், அமெரிக்கர்களைக் கொண்டு வந்து பணிக்கமர்த்தியிருப்பது அர்த்தமில்லாத செயல் என்று கூறி தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவர்.
சொல்லப்போனால் அமெரிக்கர்கள் இங்கே இருக்கவே கூடாது, அப்படியிருந்தும் அவர்களுக்கு தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு வேறு அளிக்கப்பட்டுள்ளது அர்த்தமில்லாதது என்று கூறியுள்ளார் அவர்.