கனடாவில் விலைவாசி உயர்வு காரணமாக மீண்டும் பணிக்குத் திரும்பும் நிலையில் வயதானவர்கள்
கனேடிய மாகாணமொன்றில், விலைவாசி உயர்வு காரணமாக செலவுகளை சமாளிக்க முடியாததால், வயதானவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
கனடாவில் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் வாழும் ஜேனட் ப்ரஷ் (77), எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை, ஆனால், அது நன்றாக இல்லை என்பது மட்டும் தெரிகிறது என்கிறார்.
Skye Bryden-Blom/Global News
வாடகை வீட்டில் வசிக்கும் ஜேனட்டுக்கு ஒரே வருவாய்தான். ஏற்ற இறக்கம் இல்லாத அந்த வருவாயில் பாதியை வீட்டு வாடகைக்காக பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறார் அவர்.
லீஸ் விதிகள் காரணமாக, தான் முந்தைய வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகக் கூறும் ஜேனட், இப்போது தான் குடியிருக்கும் வீட்டுக்கு, முந்தைய வீட்டைவிட மாதம் 250 டொலர்கள் கூடுதலாக செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவிக்கிறார்.
Skye Bryden-Blom/Global News
இந்த வயதில், வீடில்லாமல் தெருக்களில் வாழும் நிலைமை ஏற்படுமானால், அது பயங்கரம் என்று கூறும் ஜேனட், எனக்கு அந்த எண்ணமே திகிலை ஏற்படுத்துகிறது என்கிறார்.
ஆக, வீட்டுக்கு வாடகை கொடுத்தாகவேண்டும், விலைவாசியோ அதிகரித்துக்கொண்டே போகிறது. அதை சமாளிக்க என்ன செய்வது?
வேறென்ன வழி, ஏதாவது வேலைக்குப் போகவேண்டியதுதான் என்கிறார் ஜேனட். ஆக, பகுதி நேர வேலைக்குச் செல்ல திட்டமிட்டு வரும் அவர், இந்த வயதில் உடலை வருத்தி கடினமான வேலைகள் செய்யமுடியாது. ஆகவே, தன் அறிவைப் பயன்படுத்தி செய்யும் வேலை எதையாவது தேடவேண்டியதுதான் என்கிறார்.