கனேடிய மாகாணம் ஒன்றை அதிரவைத்த தொடர் சம்பவம்: சிக்கிய தமிழரின் அதிர்ச்சி பின்னணி
கனடாவின் கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் தொடர் வாகனத் திருட்டு புகார்களின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை முன்னெடுத்துள்ள பொலிசார் தமிழர் ஒருவர் உட்பட ஒரு குழுவை கைது செய்துள்ளனர்.
கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் கார் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த பொலிசார் ஒரு டசின் பேரை கைது செய்ததோடு 100 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கடந்த மே மாதம் பொலிசார் தெரிவிக்கையில், 2017 ஆம் ஆண்டிலிருந்து வாகனத் திருட்டுகளின் எண்ணிக்கை 81% உயர்ந்துள்ளதாகவும், 2019 மற்றும் 2020 க்கு காலகட்டத்தில் கார் திருட்டுகள் 39% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுமார் 1.4 மில்லியன் டொலர் பெறுமதியான 19 திருடப்பட்ட வாகனங்களையும் அதிகாரிகள் தரப்பு மீட்டுள்ளதாகவும், மேலும் 5 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான 50 திருடப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றின் வாகன அடையாள இலக்கங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் பிராம்டனைச் சேர்ந்த 21 வயதுடைய ஆயுப் அப்தி 6 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். ரொறன்ரோவைச் சேர்ந்த 19 வயதான லெனாக்ஸ் கிரான்ட், விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டவர்களில் வயதில் குறைவானவர் என கூறப்படுகிறது.
மேலும், இந்த நடவடிக்கையில் கைதானவர்களில் மூத்தவர் ஆதவன் முருகேசபிள்ளை என்ற 30 வயதான நபர். அவர் மோசடி மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்கள் புகார் அல்லது தகவல் தெரிவிக்க விரும்பினால், பொலிசாரை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.