கனடாவில் வீடொன்றில் ஆண் சடலமாக மீட்பு – காவல்துறை தீவிர விசாரணை!
கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், பாரி சவுண்ட் நகரில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில், சர்ச் வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிற்குச் சென்ற காவல்துறையினர், அங்கு ஒரு வயது வந்த ஆண் உயிரிழந்து கிடப்பதைக் கண்டறிந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும், பொதுமக்களுக்கு வேறு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் சர்ச் வீதிப் பகுதியில் காவல்துறையினரின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையானது ஒன்றாரியோ பொலிஸாரின் குற்றப் புலனாய்வுக் கிளை, தலைமைச் சவப்பரிசோதனை அதிகாரி அலுவலகம் மற்றும் ஒன்ராறியோ தடயவியல் நோயியல் சேவை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல்கள் அறிந்தவர்கள் உடனடியாக காவல்துறையை 1-888-310-1122 என்ற எண்ணிலோ அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பின் மூலமாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.