கனடா படகு விபத்து ; பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், ரிச்மண்ட் அருகே கடந்த வாரம் மீன்பிடிப் படகு ஒன்று மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவத்தில், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பயணிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 28 அன்று ராபர்ட்ஸ் பேங்க் கடல் பகுதியில், 10 பேருடன் பயணித்த 'பிக் கோஸ்ட்' என்ற பெயருடைய சொகுசு மீன்பிடிப் படகு கடலில் மூழ்கியது.
'டாப் வான்கூவர் ஃபிஷிங் சார்ட்டர்' நிறுவனத்திற்குச் சொந்தமான இப்படகில் இருந்தவர்களில் 4 பேர் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 6 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான பயணிகளின் வயது மற்றும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், தங்களது தனியுரிமையைக் கருதி பெயர்களை வெளியிட வேண்டாம் எனப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண், அமெரிக்காவின் சீட்டல் நகரில் வசித்து வந்த 28 வயதுடைய சீனப் பிரஜை எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.