திடீரென நடுவானில் குலுங்கிய விமானம்; தலையில் விழுந்த பெட்டிகளால் பயணிகள் அதிர்ச்சி!
இந்தியாவில் ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் காற்றின் வேகத்தில் சிக்கி பயங்கரமாக குலுங்கியதில் 14 பயணிகள், 3 விமான சிப்பந்திகள் என மொத்தம் 17 பேர் காயமடைந்த நிலையில் சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து நேற்று மாலை மேற்குவங்க மாநிலம் துர்காபூருக்கு பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது. இதன்போது திடீரென நடுவானில் காற்றின் வேகத்தில் சிக்கி விமானம் குலுங்கியது. இதில் மேலே இருந்த பயணிகளின் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் கீழே விழுந்ததில் சில பயணிகளுக்கு தலையில் காயம் ஏற்பட்டதில் சிலருக்கு தையல் போடப்பட்டது.
சம்பவத்தில் பயணிகளில் மொத்தம் 14 பேருக்கும், விமான சிப்பந்திகளில் மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை நியமித்துள்ளதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சம்பவத்திற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் விளக்கம் அளித்து வெளியிட்ட அறிக்கையில், மே 1ஆம் தேதி, ஸ்பைஸ் ஜெட் போயிங் B737 ரக விமானம் ( விமான எண்: SG-945 ) மும்பையில் இருந்து துர்காபூருக்கு சென்றது. எதிர்பாராவத விதமாக விமானம் ஜெட் டர்பியூலன்ஸில் சிக்கியது. இதில் சில பயணிகள் காயமடைந்தனர். இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானம் துர்காபூர் வந்தவுடன் காயமடைந்த பயணிகள் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை விமானம் தரையிறங்கும் வேளையில் மோசமான வானிலையால் இந்த விபத்து நடந்திருந்தாலும் கூட விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக விமானத்தில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.
