இலங்கையின் ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸார்
கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வியாழன் பிற்பகல் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கண்டி குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் 3 பொலிஸார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சந்தேகநபர்களுக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகல பொலிஸாரையும் கைது செய்யுமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் கடந்த 27ஆம் திகதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பொலிஸ் தலைமையகத்தில் இன்று (28) கிடைக்கப்பெற்றதுடன், பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த லக்ஷான் கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.