பூர்வக்குடி மாணவர்கள் மரணம்... முதன்முறையாக கவலை தெரிவித்த போப் பிரான்சிஸ்
கனடாவில் பூர்வக்குடி மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் போப் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபை பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும், போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரதமர் ட்ரூடோ முன்வைத்திருந்த கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறன்று செயின்ட் பீற்றர்ஸ் சதுக்கத்தில் குழுமியிருந்த பக்தர்களிடையே பேசும் போது, போப் பிரான்சிஸ், இதுவொரு துன்பியல் நிகழ்வு என மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் தலைவர்களும் தேவாலய நிர்வாகிகளும் இணைந்து செயல்படவும் அழைப்பு விடுத்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்த விவகாரம் தொடர்பில் வத்திக்கான் மன்னிப்பு கோரவில்லை என்பதில் மிகுந்த ஏமாற்றமடைந்ததாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார்,
மேலும் கத்தோலிக்க தேவாலயங்கள் இந்த விவகாரத்தில் கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
19 ஆம் நூற்றாண்டு முதல் 1970 கள் வரை 150,000 க்கும் மேற்பட்ட பூர்வக்குடி குழந்தைகள் அரசு நிதியுதவி பெற்ற கிறிஸ்தவ பள்ளிகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதில் பெரும்பாலான பள்ளிகள் கத்தோலிக்க திருச்சபையின் கீழ் தேவாலயங்களால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.