பாப்பரசர் பிரான்ஸிஸ் இற்கு நிமோனியா தொற்று; வத்திக்கான் தகவல்
கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்ஸிஸுக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
88 வயதான பாப்பரசர் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் கடந்த (14) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிடி ஸ்கேன் பரிசோதனை
பாப்பரசருக்கு நேற்றையதினம் மேற்கொண்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
பரிசோதனைகள், நெஞ்சு பகுதியில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே மற்றும் மருத்துவ அறிக்கைகள் நோய் ஆபத்தானது என்பதை காட்டுக்கின்றது.
எனினும் போப் நல்ல நிலையில் உள்ளாரெனவும் "செபித்தல், ஓய்வெடுத்தல் மற்றும் பிரார்த்தனை செய்வதில்" நாளை கழித்துவருவதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. தனது உடல் நலத்திற்காக செபிக்குமாறு பாப்பரசர் கேட்டுக் கொண்டதாக வத்திக்கான் தெரிவித்துள்ளார்.
பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்பு பல நாட்களாக மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார். திருப்பலி பூசை வேளையில் முன்னெடுக்கப்படும் ஆராதனைகளின் போது தயாரிக்கப்பட்ட உரைகளை வாசிக்க அதிகாரிகளை நியமித்தார்.
இவ்வாண்டு புது வருடத்திற்கான வார இறுதியில் பல ஆராதனைகளை பாப்பரசர் பிரான்ஸிஸ் வழி நடத்தவிருந்தார். இந்த நிகழ்வுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை நடைபெறும்.
இந்நிலையில், பாப்பரசர் பங்கேற்க இருந்த அனைத்து பொது நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. பாப்பரசருக்கு அவரது 21 ஆவது வயதில் நுரையீரலில் ஒரு பகுதி அகற்றப்பட்டமையினால் வயது முதிர்ந்த நிலையில் நுரையீரல் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு பாப்பரசராக 12 ஆண்டுகள் சேவையாற்றிய பாப்பரசர் பிரான்சிஸ் 2023 ஆம் ஆண்டு ஆர்ஜன்டீனாவில் மூச்சுக்குழாய் அழற்சியினால் 3 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் பல தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.