சீனாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ; 3 பேர் பலி, 70 ஆயிரம் பேர் பாதிப்பு
சீனாவில் நேற்று இரவு இடம்பெற்ற இரு பெரும் நில அதிர்வுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் , 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
சீனாவின் குயிங்காய் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.34 மணியளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.4 ரிச்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது.
இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகாத போதும் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஏற்கனவே, நேற்று இரவு 7.18 மணிக்கு சீனாவின் டாலிக் பகுதியில் 6.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.