குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி: வருங்கால கணவன் மாயம்!
ஸ்கொட்லாந்து நாட்டில் நிறைமாத கர்ப்பிணியான ஆசிரியர் ஒருவர் குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவருடன் தங்கியிருந்த வருங்கால கணவன் காணாமல் போயுள்ளார்.
குறித்த நபரை ஸ்கொட்லாந்து பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
கிளாஸ்கோவில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து 35 வயதான Marelle Sturrock என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியான அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், விரிவான விசாரணை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த ஆசிரியரின் வருங்கால கணவன் திடீரென்று மாயமாகியுள்ளதும் பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டேவிட் யேட்ஸ் என்ற அந்த நபரை தீவிரமாக தேடிவரும் பொலிஸார், ஹெலிகொப்டர் மற்றும் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
ஆசிரியர் Marelle Sturrock தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 2015ல் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ள இந்த தம்பதி இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
சடலமாக மீட்கப்படுவதற்கும் ஒரு நாள் முன்னர், தமது நண்பர்களுடன் சிரித்த முகத்துடன் காணப்படும் புகைப்படம் ஒன்றை Marelle Sturrock தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
தமது 17 வயது முதல் கிளாஸ்கோவில் குடியிருக்கும் Marelle Sturrock முதலில் நாடக கலைஞராகவும் பின்னர் ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணியாற்றத் துவங்கியுள்ளார்.
தற்போது Mugdock பூங்கா பகுதியில் இருந்து டேவிட் யேட்ஸ் மாயமாகியுள்ள நிலையில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.