முதலாவது தடுப்பூசியை போட்டுக்கொண்ட இளவரசர் சார்ள்ஸ் மற்றும் கமிலா
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோருக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கிளாரன்ஸ் ஹவுஸ் தெரிவித்துள்ளது.
எனினும் அவர்களுக்கு எந்த தடுப்பூசி வழங்கப்பட்டது அல்லது எங்கு வழங்கப்பட்டது தொடர்பான தகவல் வெளியாகவில்லை.
72 வயதான இளவரசர் சார்ள்ஸ் மற்றும் 73 வயதான கமிலா வயது அடிப்படையில் தடுப்பூசிக்கான நான்காவது முன்னுரிமை குழுவில் உள்ளனர்.
இங்கிலாந்தில் இதுவரை முதலாவது கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 12.6 மில்லியன் மக்களில் இவர்கள் இருவரும் அடங்குவர்.
கடந்த மாதம் மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
தொற்றுநோயின் முதல் அலைகளின் போது இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருந்தபோதும் அவருக்கு சுவை மற்றும் வாசனை இழப்பு உள்ளிட்ட லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.
அவரது மகன், இளவரசர் வில்லியம், கொரோனா தொற்றுக்குள்ளாகி "மிகவும் கடினமாக" பாதிக்கப்பட்டார். பிரித்தானியாவில் தடுப்பூசிக்கான முதல் நான்கு முன்னுரிமைக் குழுக்களில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் தொழிலாளர்கள், பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்கள், அவர்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக வைரஸால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் எனக் கருதப்படுவோர் அடங்குகின்றனர்.
இந்த நிலையில் அரசாங்கத் திட்டங்களின் கீழ், நான்கு முன்னுரிமைக் குழுக்களும் பெப்ரவரி 15 ஆம் திகதிக்குள் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.