மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு; பெண்ணின் தலையில் பாய்ந்த குண்டு
மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சுட்டில் பெண்ணின் தலையில் குண்டுபாய்ந்ததில் தீவிர சிகிற்ச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மியான்மர் நாட்டில் நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய நாடாளுமன்றம் கடந்த முதலாம் தேதி கூட இருந்த நிலையில், அதிரடியாக இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது
ஆனால் அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுத்து, கைது செய்து வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தலைவரான ஆங் சான் சூ கி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டங்களை நடத்துகின்றனர்.
இராணுவ புரட்சி பற்றி தளபதி மின் ஆங் ஹலேங் பேசுகையில், தேர்தலில் நடைபெற்ற மோசடியால் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதாகவும், தேர்தல் கமிஷனை மாற்றியமைத்து, மியான்மரில் புதிதாக தேர்தல் நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த நிலையில், மியான்மரில் கடந்த 8 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் 30 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மியான்மர் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டங்களுக்கும், பொது இடங்களில் உரை நிகழ்த்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்நாட்டு மக்கள் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மியான்மரின் நேபிடா என்ற இடத்தில் நேற்று நடந்த 4வது நாள் போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களை கலைந்து செல்ல ராணுவத்தினர் வலியுறுத்தினர்.
அவர்கள் மீது தண்ணீர் பாய்ச்சியதுடன் எச்சரிக்கை செய்வதற்காக வானை நோக்கி துப்பாகியால் சுட்டனர். அப்போது அங்கிருந்த பெண் ஒருவரின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
இதனால் அந்த பெண் அதே இடத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.