கொரோனா பாதித்தவர்களுக்கு நரம்பியல் பிரச்சினைகள் : அமெரிக்கா ஆய்வில் தெரிவிப்பு
கொரோனா தொற்றின் பின் விளைவுகள் தொடர்பாக அமெரிக்காவின் ஹூஸ்டண் மெத்தடிஸ்ட் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஜாய் மித்ரா, முரளிதர் எல்.ஹெக்டே தலைமையிலான குழுவினர் ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளனர்.
அந்த ஆய்வில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு நீண்டகால மீள இயலாத நரம்பியல் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும் எனவும் குறிப்பாக வயதானவர்கள், இதர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று மற்ற முக்கிய உறுப்புகளை போலவே மூளையிலும் ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மூளை வரைபட ஆய்வுகளில் இரத்தம் கசியும் ஆழமான புண்கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இவை அறிவாற்றலையும், நினைவுத்திறனையும் பாதிக்கக்கூடியவையாக உள்ளதாகவும் இதன் கூறுகள் அல்சைமர், பார்கின்சன் ஆகிய நோய்களுடன் ஒத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் கண்டறியா விட்டால் இந்த பாதிப்புகளை சரிசெய்ய இயலாது. கொரோனா நோயாளிகளில் 20 முதல் 30 சதவீதம் பேர் தங்களுக்கு நினைவு இழப்பு, தினசரி நடவடிக்கைகளை மறத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக கூறியுள்ளனர்.
கொரோனா தொற்றால் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள், மூளை புண்களால் ஏற்படும் நுரையீரல், இதயம் சார்ந்த பிரச்சினைகள் குறித்த பல்வேறு நிலைகளில் தொடர் ஆய்வுகள் மேற் கொண்டு வருகிறோம். தடுப்பூசி செலுத்துவது, உரிய சுகாதார முறைகளை கடைபிடிப்பதன் மூலம் கொரோனாவராமல் தடுப்பதுடன் நீண்ட கால பாதிப்பில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.