ரொறன்ரோ பள்ளி மாணவன் சீரழிக்கப்பட்ட விவகாரம்: வெளியான முழு தகவல்
ரொறன்ரோ பள்ளி மாணவன் சீரழிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட மாணவன் தொடர்பில் முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் அனைத்து ஆண்கள் பள்ளி ஒன்றில் மாணவர் கும்பல் ஒன்றால் சக மாணவன் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் பிரதான குற்றவாளி என கண்டறியப்பட்ட பள்ளி மாணவனுக்கு தண்டனை காலம் விதிக்காமல் நன்னடத்தை காலம் மட்டும் கோரி அந்த மாணவன் தரப்பு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
கடந்த 2018, நவம்பர் 7ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் மாணவன் பாலியல் ரீதியாக கொடூரமாக தாக்கப்பட்டதுடன், குறித்த சம்பவம் காணொளியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், நீதிமன்ற விசாரணைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நடந்த இறுதி விசாரணையில், முக்கிய குற்றவாளியான மாணவருக்கு 4 முதல் 8 மாதங்கள் சிறை தண்டனையும் 18 மாதங்கள் நன்னடத்தை காலமாகவும் விதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில், குற்றவாளியென அடையளம் காணப்பட்ட மூன்று மாணவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் நன்னடத்தை காலமாக விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மூன்று மாணவர்கள், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுவனை சீரழித்ததுடன், ஆயுதங்களையும் பயன்படுத்தியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் நடந்த சம்பவங்களை காணொளியாக மொபைலில் பதிவு செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ளார். இன்னொரு மாணவனுக்கு சிறை தண்டனை விதிக்காமல் 2 ஆண்டுகள் நன்னடத்தை காலம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய இரு மாணவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட அனைவருக்கும் சிறை தண்டனை விதிக்க அரசு தரப்பு சட்டத்தரணி கோரிக்கை முன்வைத்த நிலையில், நீதிபதி அதை ஏற்க மறுத்ததாகவே தெரிய வந்துள்ளது.
ரொறன்ரோவில் அமைந்துள்ள St. Michael அனைத்து ஆண்கள் பள்ளியில் நடந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பிலான வழக்கின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் அக்டோபர் 15ம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
https://canadamirror.com/article/sentencing-hearing-set-for-teen-1628601270