லண்டனில் ரோமப் பேரரசு கால சுவரோவியங்கள் கண்டுபிடிப்பு!
லண்டன் நகரின் Southwark பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணியின் போது, பண்டைய ரோமப் பேரரசு கால வண்ணமயமான சுவரோவியத் துணுக்குகள் ஆயிரக்கணக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது லண்டனில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய ரோம சுவரோவியத் தொகுப்பாகும். “தி லிபெர்டி” (The Liberty) வளர்ச்சி திட்டம் நடை பெறும் இடத்தில் குறித்த சுவரோவியத் துணுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த லண்டன் அருங்காட்சியக தொல்லியல் கழகம் (Museum of London Archaeology – MOLA) இந்த சுவரோவியங்கள் கி.பி. 200-க்கு முந்தைய ஒரு உயர்மட்ட கட்டடத்தின் பகுதியைச் சேர்ந்தவை என்று தெரிவித்துள்ளது.
இந்த ஓவியத் துணுக்குகள் ரோமப் பேரரசின் கீழ் இருந்த லண்டினியம் நகரின் சிறப்பு கலாசாரத்தையும், அந்நாளைய சமூகத்தின் உயர்தர வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கின்றன.
கடந்த 1,800 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்திருந்த இவை, தற்போது திரும்பவும் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் முழு வடிவம் மீள உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய அகழ்வாராய்ச்சிகளில் இதே பகுதியில் ரோமக் கால மொசாயிக் படைவினைகள் மற்றும் அபூர்வமான மரணக்குடில் (mausoleum) போன்றவை கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இந்த புதிய கண்டெடுப்பு, லண்டனின் பண்டைய வரலாற்றை மேலும் விரிவாக புரிந்து கொள்வதற்கான முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.