கனடாவில் பவர் பேங்க் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் வயர்லெஸ் பவர் பேங்க் சாதனத்தைப் பயன்படுத்துபவர்கள், தீ விபத்து ஏற்படும் அபாயம் காரணமாக அதனை "உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு" கனடிய சுகாதாரத் திணைக்களம் நுகர்வோரை அவசர அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
'சூப்பர் ஆஃப்-ரோடு 12,000 எம்ஏஹெச் சோலார் வயர்லெஸ் பவர் பேங்க்' என்ற சாதனத்திற்கான திரும்பப் பெறும் அறிவிப்பை ஹெல்த் கனடா வெளியிட்டுள்ளது.
இந்தச் சாதனத்தில் உள்ள லித்தியம்-அயன் பேட்டரி அதிகப்படியாக வெப்பமடைந்து உப்பக்கூடும் என்றும், இதனால் திடீரென தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்தத் திரும்பப் பெறும் நடவடிக்கை, ஹெல்த் கனடா, அமெரிக்காவின் நுகர்வோர் தயாரிப்புப் பாதுகாப்பு ஆணையம் (CPSC) மற்றும் கியூபெக் மாகாணத்தை தளமாகக் கொண்ட 'ஸ்பெக்டர் அண்ட் கோ' ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஜனவரி முதல் 2023 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தத் தயாரிப்புகள் கனடாவில் சுமார் 5,000 அலகுகளும், அமெரிக்காவில் 7,399 அலகுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த விபத்து அபாயமுள்ள பவர் பேங்க்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். ஜூன் 23 நிலவரப்படி, கனடாவில் இந்தச் சாதனத்தால் எந்தவொரு விபத்தோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாகப் புகார்கள் வரவில்லை.
அதே நேரத்தில், அமெரிக்காவில் இரண்டு பேட்டரிகள் உப்பியதாகப் புகார்கள் பதிவாகியுள்ளன; ஆனால் அங்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.எ