உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்த 50 இலட்சம் பேர்!
உக்ரைன் மீது ரஷ்யா 51 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால், உக்ரைனில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் எல்லையோர கிராமங்களை குறிவைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.
மேலும், உக்ரைனுக்கு பதிலடியாக அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்த போரினால், பெரிதும் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
கடந்த பெப்ரவரி 24 முதல் உக்ரைனில் இருந்து இதுவரை 50 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவையின் ஐக்கிய நாடுக்களுக்கான முகமை தெரிவித்துள்ளது.