உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி நான்றாக செயல்படும் - இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் குடாஷேவ்
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுகிறது என நிபுணர்கள் கூறியுள்ளதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் குடாஷேவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கேவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது குறித்து இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் குடாஷேவ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;- “ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் செயல்திறன் உலகம் அறிந்ததாகும். கடந்த ஆண்டின் 2-ம் பாதியில் இருந்து, ரஷ்ய மக்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியானது, உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவிலும் தயாரிக்கப்பட உள்ளது. எனவே இது இந்திய-ரஷ்ய தடுப்பூசியாகும். ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில், அடுத்த ஒரு ஆண்டிற்குள் 850 மில்லியன் டோஸ்கள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரே தவணையில் செலுத்தும் தடுப்பூசியை தயாரிப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.