சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகளை மிரட்டும் ரஷ்யா!
சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைனும் போரை எதிர்கொண்டு வருகிறது. ராணுவ நடவடிக்கை என்று கூறி ரஷ்யா மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து 51வது நாளாக இன்று நீடித்து வருகிறது.
இந்த சூழலில் நேட்டோ அமைப்பில், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதுபற்றி ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் டிமிட்ரி மெட்வடேவ்(Dmitry Medvedev)விடுத்துள்ள எச்சரிக்கையில், இதனால், ரஷ்யாவின் மேற்கு பகுதியில் தரை மற்றும் வான்வழி பாதுகாப்பு படைகள் கூடுதலாக குவிக்கப்படும்.
பால்டிக் பகுதியில் அணு ஆயுத பயன்பாடற்ற சூழலை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியமற்ற நிலை ஏற்படும்.
எனவே, சமநிலை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ரஷ்யாவில் அதிபர் புடினின்(Vladimir Putin) இரு தசாப்த பதவி காலத்தில், கடந்த 2008 முதல் 2012 வரை இடைக்கால அதிபராக பதவி வகித்தவர் மெட்வடேவ்(Medvedev).
அவர், முக்கிய முடிவுகளை எடுக்கும் உயரிய அதிகாரம் பெற்ற நபர் இல்லை என்றபோதிலும், அவ்வப்போது ஆக்ரோசமுடன் பேசி வருகிறார்.
போலந்து மற்றும் பால்டிக் பகுதிகளுக்கு இடையே கலினின்கிராட் பகுதியில் நவீன அணு ஆயுத கிடங்கு ஒன்றை ரஷ்யா அமைத்திருக்க கூடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு கடந்த 2018ம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.