ரஷ்ய பெண்களுடன் உடலுறவு கொண்டார் ; பில் கேட்ஸ் குறித்து எப்ஸ்டீன் அதிர்ச்சி தகவல்
அமெரிக்க நீதித் துறை சமீபத்தில் வெளியிட்ட, 'எப்ஸ்டீன் கோப்புகளில்' மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு பில் கேட்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஜெப்ரி எப்ஸ்டீன், 'பைனான்சியர்' மட்டுமின்றி பெரிய பணக்காரர். இளம்பெண்கள் மற்றும் சிறுமியரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டுக்காக, 2008ல் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, புளோரிடா சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் தலைவர்கள், உலகப் பணக்காரர்கள் மற்றும் பிரபலங்களுடன் எப்ஸ்டீன் நெருங்கி தொடர்பில் இருந்தார்.
ஏறத்தாழ, 10 ஆண்டுகளுக்கு பின், 2019 ஜூலை 6ல் மீண்டும் பாலியல் குற்றச்சாட்டில், எப்ஸ்டீன் கைதாகி நியூயார்க் சிறையில் இருந்த போது, ஆக., 10ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் இறந்த பின், அவரோடு தொடர்பில் இருந்த நபர்களின் பெயர்கள் மற்றும் விபரங்கள் அடங்கிய கோப்புகள் நீதிமன்ற உத்தரவுப்படி அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட கோப்புகளில், மைக்ரோசாப்ட் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான பில் கேட்ஸ் குறித்து அதிர்ச்சி தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த 2013 ஜூலை 18ல், எப்ஸ்டீன் தனக்கு தானே அனுப்பிக் கொண்ட இ - மெயிலில் பில் கேட்ஸ் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி, ரஷ்ய பெண்களுடன் பில் கேட்ஸ் பாலியல் உறவு கொண்டதால் அவருக்கு பால்வினை நோய் ஏற்பட்டதாக அதில் தெரிவித்துள்ளார்.

அந்த தொற்றை குணப்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகளை தரும்படி பில் கேட்ஸ் கேட்டதாகவும், அதை தன் அப்போதைய மனைவி மெலிண்டாவுக்கு, அவருக்கு தெரியாமல் ரகசியமாக கொடுக்க திட்டமிட்டதாகவும் எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய அந்தரங்க தொடர்புகள் குறித்த விபரங்களை அழிக்கும்படி பில் கேட்ஸ் வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை பில் கேட்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து பில் கேட்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது, இந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானவை; அடிப்படை ஆதாரமற்றவை. எப்ஸ்டீனுடனான தொடர்பை பில் கேட்ஸ் முறித்ததால், அவரை பழிவாங்கவே இப்படி பொய்யான குற்றச்சாட்டுகளை எப்ஸ்டீன் கூறியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த தகவல்கள் அனைத்தும் எப்ஸ்டீன் எழுதிய சொந்த குறிப்புகள் தானே தவிர, இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.