தாயாரை காப்பாற்ற தனது உயிரை விட்ட கனேடியர்: உலுக்கும் சம்பவம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மண்சரிவில் சிக்காமல் இருக்க தாயாரை எச்சரித்த நபர், அவரது கண்முன்னே மண்ணில் புதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Lillooet பகுதிக்கு வெளியே, பிரதான சாலை 99ல் குறித்த கடினமான சம்பவம் கடந்த 15ம் திகதி ஏற்பட்டுள்ளது. புயல் மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமான பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒருபகுதி, இன்னமும் மீள முடியாமல் தத்தளித்து வருகிறது.
இந்த நிலையில் 36 வயதான Brett Diederichs மற்றும் அவரது துணைவி, தாயார் ஆகியோருடன் இரண்டு வாகனங்களில் விக்டோரியா பகுதிக்கு புறப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே நவம்பர் 15ம் திகதி ஞாயிறன்று மிக மோசமான புயல் தாக்கியுள்ளது. அதேநாள் பிற்பகல் மூன்று பிரதான சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதுடன் சில இடங்களில் சாலையும் அடித்து செல்லப்பட்டது.
ஞாயிறன்று இரவு Kamloops பகுதியில் தங்கிய Brett குடும்பம், திங்கட்கிழமை பிரதான சாலை 99 வழியாக பயணத்தை முன்னெடுக்க முடிவு செய்தனர்.
அடுத்த நாள் மூவரும் புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே லேசான மண்சரிவு ஏற்பட்ட காரணத்தால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காருக்கு வெளியே வந்து நோட்டமிட்டுள்ளார் Brett. அதேவேளை அவரது தாயாரும் காருக்கு வெளியே வந்துள்ளார். அப்போது தான் அந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
சில நொடிகளில் நிலைமையை புரிந்து கொண்ட Brett, தாயாரை காருக்குள் சென்றுவிடுபடி அலறியுள்ளார். அடுத்த நொடி அவர் அந்த மண்சரிவில் சிக்கி மாயமாகியுள்ளார்.
குறித்த மண்சரிவில் சிக்கியவர்களில் நால்வரின் சடலம் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
ஆனால் Brett-ன் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை என்றே தெரியவந்துள்ளது.