கனடாவில் கடுமையான உறைமழை எச்சரிக்கை ; மின்வெட்டு மற்றும் போக்குவரத்து பாதிப்பு அபாயம்
கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் மற்றும் அட்லாண்டிக் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு கடுமையான உறைமழை (Freezing Rain) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த வானிலை நிலைமை “விரிவானதும் நீண்ட நேரம் நீடிக்கக்கூடியதுமானது” எனவும், இதனால் மின்வெட்டுகள், சொத்து சேதங்கள் மற்றும் பயண குழப்பங்கள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த அமைப்புகளின் தொடர் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் ஒன்றாரியோ மாகாணத்தில் கடுமையான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக டொராண்டோ உள்ளிட்ட தெற்கு ஒன்டாரியோ பகுதிகளில் பெருமளவு மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
புயல் வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி நகரும் போது, செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை மழை உறைமழையாக மாறும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கியுபகெ் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக மொன்றியல் மற்றும் லாவல் நகரங்களில் முதல் 24 மணிநேரத்தில் 20 முதல் 30 மில்லிமீட்டர் வரை உறைமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது பொதுப் போக்குவரத்து மற்றும் மின்சாரம் போன்ற சேவைகளை கடுமையாக பாதிக்கக்கூடிய “முக்கியமான உறைமழை நிகழ்வு” என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.