ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை ; உயிரிழப்பு 16 ஆயிரத்தை கடந்தது
ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதித்து வரும் கடும் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இந்த வெப்ப அலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பொதுவாக குளிரான காலநிலையைக் கொண்ட பெல்ஜியத்திலும் வெப்பத்தின் தாக்கம் தீவிரமாக காணப்படுகிறது.

பெல்ஜியத்தின் தெற்கு பகுதியான வாலோனியாவில், வழக்கமாக எதிர்பார்க்கப்பட்டதை விட உயிரிழப்பு விகிதம் 77 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் எதிர்கால கோடைக்காலங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என காலநிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுபோன்ற கடும் வெப்ப நிலைகளை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.