யாழில் வாய் பேச முடியாத பெண் மீது பாலியல் துஸ்பிரயோகம்
யாழ்ப்பாணத்தில் வாய் பேச முடியாத பெண்ணொருவரை நள்ளிரவு வேளை வீடு புகுந்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயன்ற சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 27ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய வாய் பேச முடியாத பெண்ணொருவர், நள்ளிரவு வேளை தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டார் என நபர் ஒருவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேளை சந்தேக நபர் தலைமறைவாகி இருந்தார்.
அந்நிலையில் சந்தேக நபர் பதுங்கியிருக்கும் இடம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின் ஊர்காவத்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை முற்படுத்திய வேளை சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிமன்று கட்டளையிட்டது.