மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பூசிகள் திருட்டு: அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!
மெக்சிகோ மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று மெக்சிகோ.
சுமார் 13 கோடி பேரை மக்கள் தொகையாக கொண்ட அந்த நாட்டில், இந்த வைரசுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். அங்கு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அந்த நாட்டின் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அங்கு மோரேலோஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு போய் விட்டன. மெக்சிகோவில் கிரிமினல்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதால், இத்தகைய பொருட்களை பாதுகாக்க ராணுவம் நாடு முழுவதும் அமர்த்தப்பட்டுள்ளது.
இந்த திருட்டு பற்றி ராணுவம் கருத்து தெரிவிக்கையில், இந்த திருட்டு மருத்துவமனையின் தடுப்பூசி குழுவின் உறுப்பினரால் சுய நலத்துக்காக நேர்மையற்ற விதத்தில் நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறி உள்ளது.
அங்குள்ள மற்றொரு மாகாணமான சோனோரோவில் ஒரு மருத்துவமனைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல், துப்பாக்கிமுனையில் அங்கிருந்த ஊழியரை மிரட்டி ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்ளையடித்து விட்டு தப்பியது.