ஹோட்டலொன்றில் துப்பாக்கிசூடு: நபரொருவருக்கு நேர்ந்த பரிதாபம்! அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவின் சிகாகோவின் புறநகரான புளூமிங்டேலில் இந்தியன் லேக்ஸ் என்ற பெயரில் 5 மாடி ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலின் 5-வது மாடியில் நேற்றுமுன்தினம் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து அங்கு விரைந்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் குண்டு பாய்ந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஜேம்ஸ் மெக்கில் ஜூனியர் (வயது 27) என்பவர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவத்தின்போது அந்த ஓட்டலில் 2 வெவ்வேறு தரப்பினரின் சந்திப்பும், விருந்தும் நடைபெற்றதாக தெரிகிறது. அப்போது மோதல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக புளூமிங்டேல் போலீஸ், பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், சம்பவம் நடந்த பகுதிக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், புளூமிங்டேல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.