ஸ்பெயினிலும் சிறுவர்களுக்கு சமூக வலைத்தள தடை
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் வகையிலான புதிய சட்டத்தைக் கொண்டு வர அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிறுவர்கள் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள்
இது குறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கருத்துத் தெரிவிக்கையில், சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் சட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயினும் இந்தத் தடையை அமுல்படுத்தத் தயாராகி வருகின்றது. அதேவேளை ஐரோப்பா முழுவதும் சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டு வயதை நிர்ணயிக்கும் விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.