கனடாவின் புதிய நடவடிக்கை ; சர்வதேச மாணவர்களுக்கு விசேட சலுகைகள்
மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச மாணவர்களுக்கு உதவும் வகையில், கனடாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் பல்வேறு விசேட சலுகைகளை அறிவித்துள்ளன.
இதன்படி, Queen’s University, McGill University மற்றும் University of Victoria உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான கால நீடிப்பு, பரீட்சைகளை ஒத்திவைக்கும் வசதி மற்றும் அவசர நிதி உதவிகள் போன்ற சலுகைகளை வழங்க முன்வந்துள்ளன.
போரின் விளைவாக குடும்பத்தினரை அல்லது நிதி ஆதாரங்களை இழந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Queen’s பல்கலைக்கழகம் குளிர்கால கல்விக் கட்டணங்களை அபராதமின்றி செலுத்த கால அவகாசம் வழங்கியுள்ளதுடன், Victoria பல்கலைக்கழகம் நிலுவை கட்டணங்களுக்காக மாணவர்களின் பதிவுகளை நிறுத்தாமல் பாதுகாத்து வருகிறது.
மேலும், Carleton University மற்றும் University of Toronto ஆகியவை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பரீட்சைகள் மற்றும் பாடப்பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்கும் சலுகைகளை வழங்கியுள்ளன.
அத்துடன், போரால் மனஅழுத்தம் அனுபவிக்கும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் மற்றும் ஆதரவு சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தச் சலுகைகளைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, University of Toronto-வின் பட்டதாரி மாணவர் சங்கம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு 1,000 டொலர் வரை அவசர உதவித்தொகை வழங்க தீர்மானித்துள்ளது.
கனேடிய பல்கலைக்கழகங்களின் இந்த மனிதாபிமான முயற்சி, போரால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.