பிரான்ஸில் அறிமுகமாகவுள்ள விசேட தடுப்பூசி கடவுச்சீட்டு!
பிரான்ஸில தடுப்பூசி போட்டவர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்கும் நடைமுறை குறித்து பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடவுச்சீட்டு மூலம் விமானப் பயணம் அல்லது பிற சேவைகளை இலகுவாகப் பெற முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த யோசனையை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுள்ள போதிலும் அதனை நிகராகரிக்கவில்லை என பிரான்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இது குறித்த சமீபத்திய கருத்துக் கணிப்பில், ஐந்தில் மூன்று பகுதியினரான, 62 வீதமானோர் இந்த யோசனைக்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
அதன்படி வெளிநாடுகளுக்கு விமானப் பயணம் மேற்கொள்ள விரும்பும் மக்கள் தடுப்பூசி கடவுச்சீட்டுகளை கட்டாயமாக்குவதற்கான யோசனையை ஆதரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கருத்து குறித்து தாம் முன்கூட்டியே விவாதிக்க ஆரம்பித்து விட்டோம் எனவும், இது மிகவும் வரைவான தீர்மானமாகும் என ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர் க்ளெமென்ட் பியூன் தெரிவித்துள்ளார்.
“இது மிகவும் முன்கூட்டிய விவாதமாகும். மற்றவர்களை விட சிலருக்கு மாத்திரம் அதிக உரிமைகளை வழங்கும் கடவுச்சீட்டு இருப்பது அதிர்ச்சியாக இருக்கும். இது தடுப்பூசியின் அவசியத்தை வழங்கும் விழிப்புணர்வாக இருக்காது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பல்வேறு அரசியல் தரப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களும் இந்த திட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளதுடன் நாட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்றால் இந்த கடவுச்சீட்டு கட்டாயமாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தடுப்பூசி கடவுச்சீட்டை விடுதிகள் மற்றும் உணவகங்கள் அல்லது பல்கலைக்கழக விரிவுரைகள் போன்ற பல்வேறு வகையான சேவைகளை அணுக பயன்படுத்தலாம் என முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியதுடன், இந்த கடவுச்சீட்டு கட்டயமாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் பிரான்ஸ் அரசாங்கம் இந்த திட்டத்தை நிராகரிக்காமல் தொடர்ந்து ஆராய்ந்து வருவதனால் வெகு விரைவில் இந்த கடவுச்சீட்டு அமுலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.