உடனடியாக சண்டையை நிறுத்துங்கள்! இந்திய பிரதமர்
உக்ரைனில் நடைபெற்று வரும் சண்டையை உடனடியாக நிறுத்துமாறு என இந்திய பிரதமர் ரஷ்யாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.
பயணத்தின் முதல் நாளான நேற்று ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது நாள் பயணமாக இன்று டென்மார்க் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி டென்மார்க் செல்வது இதுவே முதல்முறையாகும். விமான நிலையம் வந்தடைந்த இந்திய பிரதமர் மோடியை டென்மார்க் பிரதமர் மிட்டீ ஃபெர்டிக்சென் நேரில் சென்று வரவேற்றார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து மரியன்போர்க் நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு இருவரும் சென்றனர். அங்கு டென்மார்க் பிரதமர் மிட்டீ ஃபெர்டிக்செனும், இந்திய பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாட்டு தலைவர்கள் தலைமையில் உயர் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய இந்திய பிரதமர் மோடி, நாங்கள் உக்ரைன் விவகாரம் குறித்தும் பேசினோம். உக்ரைனில் சண்டையை உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் பிரச்சினையை தீர்க்கும்படி நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்’ என்றார்.