ஹோர்முஸ் நீரிணை எங்களுடையது ; அமெரிக்காவுக்கு ஈரான் அதிரடி பதிலடி
ஹோர்முஸ் நீரிணை ஈரானின் உத்தரவின் பேரிலேயே மூடப்பட்டு திறக்கப்படும் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை விவகாரம் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
இந்த நீரிணையை கைப்பற்றி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ஈரான் கடும் பதிலடி கொடுத்துள்ளது.

ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்கு சொந்தமானது; அது ஈரானிடமே இருக்கும். ஈரானின் உத்தரவின்படியே அது மூடப்பட்டு திறக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு, தமது திட்டங்களை கைவிடும் வரை ஹோர்முஸ் நீரிணை தொடர்பான முடக்கம் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, ஈரானுடனான மோதலில் அமெரிக்காவின் முக்கிய இலக்குகளில் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கச்சா எண்ணெய் விலையை குறைப்பது என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்திருந்தார்.
இதனால், உலகின் முக்கிய எரிபொருள் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை தொடர்பான அமெரிக்கா–ஈரான் மோதல் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.