ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி ; உலக உணவு விலைகள் கடுமையாக உயரும் அபாயம்
வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமையானது உலகளாவிய விவசாய உணவு அமைப்பில் கடுமையான கட்டமைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் தொடக்கமாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.
இது ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து தடையல்ல என்றும், அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் உலகளாவிய உணவு விலைவாசி மிகக் கடுமையான உச்சத்தை எட்ட இது வழிவகுக்கும் என்றும் அந்த அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.

அத்துடன், இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான கால அவகாசம் மிக வேகமாக குறைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர் மெக்சிமோ டொரெரோ (Maximo Torero) வெளியிட்டுள்ள புதிய ஒலிப்பதிவில் (Podcast), நாடுகளின் பின்னடைவுத் திறனை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் இந்த விநியோகத் தடையால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் அதிக எரிசக்தி செலவுகள் காரணமாக, சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் மாதாந்திர விலை மாற்றங்களை கண்காணிக்கும் 'FAO உணவு விலைக் குறியீடு' (FAO Food Price Index) கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்வடைந்துள்ளது.
இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கங்கள், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் இணைந்து மாற்று வர்த்தகப் பாதைகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தவிர்த்தல், மனிதாபிமான உதவிகளைப் பாதுகாத்தல் மற்றும் போக்குவரத்துச் செலவுகளைத் தாங்குவதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கான குறுகிய கால நடவடிக்கைகளாக வர்த்தக நடவடிக்கைகளை மாற்று நில மற்றும் கடல்வழிப் பாதைகளுக்கு மாற்றுதல், குறிப்பாக எரிசக்தி, உரங்கள் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதிப்பதைத் தவிர்த்தல், மற்றும் மனிதாபிமான உணவு உதவிகளுக்கு எவ்வித வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மத்திய கால நடவடிக்கைகளாக விவசாயிகளின் அறுவடை காலங்களுக்கு ஏற்ப அவசரகால கடன் வசதிகளை வழங்குதல், விரைவான உதவிகளை விநியோகிப்பதற்காக டிஜிட்டல் விவசாயி பதிவேடுகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல் மற்றும் 2022 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'உணவு அதிர்ச்சி நிதியுதவி சாளரத்தை' மீண்டும் செயல்படுத்துதல் ஆகியவை முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், உலகளாவிய ரீதியில் வறட்சி மற்றும் மழைவீழ்ச்சி மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் இந்த உணவு நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.