மியான்மரில் வெடித்தது போராட்டம்: முடக்கப்பட்டது இன்டர்நெட்
ராணுவ ஆட்சியை நீக்க வலியுறுத்தியும் ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் யாங்கோனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மியான்மரில் நடந்த பொதுத்தேர்தலில், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக லீக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டிய ராணுவம், தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.
இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.
நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.
போராட்டங்கள் பரவுவதை தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன