கனடா பள்ளியில் உடைகளை களைந்து மாணவர்களிடம் சோதனை: கொந்தளித்த பெற்றோர்
கனடாவில் மாண்ட்ரீல் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவர்களின் உடைகளை விலக்கி பள்ளி நிர்வாகம் சோதனை முன்னெடுத்த செயல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் தடை செய்யப்பட்ட vaping பொருட்களை மறைத்து வைத்துள்ளார்களா என்பதை கண்டறியவே குறித்த சோதனை முன்னெடுக்கப்பட்டதாக நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நான்கு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வரும் திங்கட்கிழமை பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு குற்றவாளி போலவே தங்களை நடத்தியதாக அதில் ஒரு மாணவன் குறிப்பிட்டுள்ளார். வெள்ளிக்கிழமையன்று பள்ளியின் இரண்டு ஊழியர்களால் ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், கால்சட்டையை முழங்காலுக்கு கீழே இறக்கிவிடச் சொன்னதாகவும் குறித்த மாணவன் புகார் அளித்துள்ளான்.
இதுபோன்ற ஒரு செயல் பள்ளிக்குள் நடக்கவே கூடாது எனவும், இது ஒன்றும் சாதாரணம் அல்ல எனவும் அந்த மாணவன் குறிப்பிட்டுள்ளான்.
ஆனால், சோதனையின் போது பள்ளி ஊழியர்கள் அந்த மாணவரின் காலுறையில் வேப் இருப்பதைக் கண்டறிந்ததால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவரின் தாயாரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கோண்டுள்ளதுடன், தமது மகன் தொடர்பில் பள்ளி நிர்வாகம் தம்மிடம் உண்மையை மறைத்ததாக தெரிவித்துள்ளார்.
பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய தமது மகன், மிகவும் சோர்வாக மனமுடைந்து காணப்பட்டதாகவும், தமது உடைகளை களைந்து சோதனையிட்டதாகவும் கூறியது கேட்டு, தமக்கு அதிர்ச்சியும் ஆத்திரமும் ஏற்பட்டது என்றார்.
இதனையடுத்து, பள்ளி நிர்வாகத்தின் மீது தாம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மாணவர்களை சோதனைக்கு உட்படுத்திய விவகாரம் தொடர்பில் விசாரிக்கப்படும் எனவும், பள்ளி நிர்வாகத்திற்கு மாணவர்களை சோதனையிடும் குறிப்பிட்ட அதிகாரம் இருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.