75 மில்லியன் டாலர் லாட்டரி வென்ற டொராண்டோ அண்ணன்-தங்கை!
லாட்டரி பரிசுகளுக்காகப் பொதுவாகப் போட்டி இருக்கும் சூழலில், டொராண்டோவைச் சேர்ந்த ஒரு அண்ணனும் தங்கையும் இணைந்து விளையாடி, ஒன்டாரியோ லாட்டரி வரலாற்றிலேயே இல்லாத வகையில் புதிய சாதனை படைத்து 75 மில்லியன் டாலர் பிரம்மாண்டப் பரிசை வென்றுள்ளனர்.
ஒன்டாரியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் வரலாற்றில், மார்ச் 3 ஆம் திகதி நடந்த 'லோட்டோ மேக்ஸ்' குலுக்கலில் அண்ணனும் தங்கையும் இணைந்து ஒரு பெரிய ஜாக்பாட்டை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
டொராண்டோவைச் சேர்ந்த ஜொனாதன் ஆர். மற்றும் மைலீன் பி. ஆகிய இந்த உடன்பிறப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளனர்.

அவர்கள் வழக்கமாக தங்களுக்குள் மற்றும் தங்களது குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் வாய்ந்த எண்களையே தேர்வு செய்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் அதிகாலையில் OLG செயலி (App) மூலம் தங்களது லாட்டரி சீட்டை பரிசோதித்தபோதுதான், தாங்கள் இந்த மாபெரும் தொகையை வென்றிருப்பதை ஜொனாதன் கண்டறிந்துள்ளார். "முதலில், தூக்கக் கலக்கத்தில் இருந்த என் கண்களுக்கு நாம் 75,000 டாலர் வென்றிருப்பது போல் தெரிந்தது.
ஆனால், எனது கண்ணாடியை அணிந்து கொண்டு மீண்டும் கூர்ந்து கவனித்தபோதுதான், அதில் இன்னும் கூடுதல் பூச்சியங்கள் இருப்பதை உணர்ந்தேன். எனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது!" என்று ஜொனாதன் கூறினார். தாங்கள் வென்ற உண்மையான தொகையை உணர்ந்ததும், ஜொனாதன் உடனடியாக மைலீனை எழுப்பியுள்ளார்.
மகிழ்ச்சியில் கண்ணீர் விடத் தொடங்கிய மைலீன், அவரது மொபைல் திரையைப் பார்த்தபோது 75,000 டாலர் வென்றதாகவே நினைத்துள்ளார். பின்னர் அவரது அண்ணன் சைபர்களை எண்ணிப் பார்க்குமாறு கூறியுள்ளார்.
"அது 75 மில்லியன் டாலர் என்பதைப் புரிந்து கொண்ட அந்த நொடியில், நான் மிகவும் உற்சாகமடைந்தேன். என்னால் அதை நம்பவே முடியவில்லை. நான் எப்போதுமே இது போன்ற ஒரு விடயத்தை கனவு கண்டிருக்கிறேன், ஆனால் அது நிஜமாகும் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. இப்போது அது நடந்துவிட்டது!" என மைலீன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.