விமானப்படை மேம்பாட்டில் உக்ரைன் தீவிரம் ; பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை
உக்ரைன் தனது விமானப்படையை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதில் பிரான்ஸ் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியதன்படி, அமெரிக்கா, ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நாடுகள் உக்ரைனின் எதிர்கால விமானப்படையின் முக்கிய ஆதாரமாக இருக்கும் F-16, Gripen, மற்றும் Rafale போர் விமானங்களை வழங்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அரசின் மதிப்பீட்டின்படி, நாட்டின் விமானப்படையை முழுமையாக மீட்டெடுக்க சுமார் 250 போர் விமானங்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரான்ஸ் தனது Dassault Aviation நிறுவனத்தின் மூலம் ரஃபேல் போர் விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் நாட்டின் Le Journal du Dimanche செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், Dassault நிறுவனம் உக்ரைன் அதிகாரிகளுடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பல்நோக்கு திறன், மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள், மற்றும் நவீன ஆயுத அமைப்புகளுடன் கூடிய ரஃபேல் விமானங்கள், உக்ரைனின் பாதுகாப்புத்திறனை உயர்த்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.