கர்ப்பிணி மனைவியின் சடலத்தை வாகனத்துடன் எரித்த இந்திய வம்சாவளி கனேடியருக்கு பரோல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கர்ப்பிணி மனைவியை கொன்று, சடலத்தை வாகனத்துடன் எரித்த இந்திய வம்சாவளி கனேடியருக்கு ஒரு நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
பரோல் வழங்கும் ஆணையம் கடந்த வாரம் இது தொடர்பான முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 11 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் இந்திய வம்சாவளி Mukhtiar Panghali என்பவர் ஒரே ஒரு நாள் மட்டும் பரோலில் வெளிவர உள்ளார்.
பங்கலிக்கு 15 ஆண்டுகள் பரோல் கிடைக்காமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள நிலையில், அவருக்கு பரோல் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சமூக கூடம் ஒன்றில் அவர் ஒரு நாள் தங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ல் 4 மாத கர்ப்பிணியான தமது மனைவியை கொலை செய்த வழக்கில் பங்கலிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆசிரியராக பணியாற்றி வந்த 31 வயது மஞ்சித் பங்கலியின் உடல் மற்றும் அவரது வாகனம் டெல்டாவில் ஒரு கடற்கரையில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
தமது மனைவியை காணவில்லை என பங்கலி புகார் அளித்த நிலையிலேயே பொலிசார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார்.
மட்டுமின்றி, மனைவியை காணவில்லை என 26 மணி நேரத்திற்கு பின்னரே, பங்கலி பொலிசாரை நாடியுள்ளார். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ஆசிரியரான பங்கலி தமது மனைவியின் கழுத்தை நெரித்துள்ளதும், அவரது இடுப்பு மற்றும் கழுத்தில் பலமாக தாக்கப்பட்ட காயங்கள் இருந்ததும் மரண காரணமாக உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து 15 ஆண்டுகளுக்கு பரோல் விடுதலையின்றி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மட்டுமின்றி, பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது மனைவியின் குடும்பத்திற்கு $600,000 நஷ்டஈடாகச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டார்.