ஒன்ராறியோவில் நேரலையின் போது மாணவர்களை முகம் சுழிக்க வைத்த ஆசிரியரின் மோசமான செயல்
ஒன்ராறியோவின் போமன்வில்லில் ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் நேரலையில் மாணவர்களை முகம் சுழிக்க வைத்த காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, செயின்ட் ஸ்டீபன் கத்தோலிக்க மேல்நிலைப் பள்ளியில் ஒரு இணைய வழி வகுப்பின் போது நிகழ்ந்தது என்று, பீற்றர்பரோ விக்டோரியா நார்தம்பர்லேண்ட் மற்றும் கிளாரிங்டன் கத்தோலிக்க மாவட்ட பள்ளி வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் கருத்தில் கொண்டுள்ளது எனவும், அதன் காணொளி காட்சிகள் தற்போது மாணவர்கள் சமூகத்தின் இடையிலும், அவர்களால் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, பள்ளியும் வாரியமும் இந்த விடயத்தை மிகவும் தீவிரமாக எடுத்து வருகின்றன என குறிப்பிட்டுள்ள அவர், நாங்கள் பள்ளி மட்டத்தில் இந்த விடயத்தை விவாதிக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டர்ஹாம் பிராந்திய பொலிஸ் துறை இந்த சம்பவம் குறித்து அறிந்திருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடந்த அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டதாக பள்ளி வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக மாணவர்களிடம் ஏதேனும் வீடியோ அல்லது படங்கங்கள் இருந்தால், தனியுரிமை அக்கறை காரணமாக அவற்றை நீக்கும்படி பாடசாலை வாரியம் குடும்பங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.