முதலில் ஊதியமற்ற விடுப்பு... பின்னர் வேலை பறிப்பு: 2000 TTC ஊழியர்கள் சிக்கலில்
நவம்பர் 20ம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் அனைவரையும் வேலையைவிட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக TTC நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கும் நடவடிக்கையானது, 2021 இறுதிக்குள் முன்னெடுக்கப்படும் என்றே TTC நிர்வாகம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 30ம் திகதிக்கு முன்னர் TTC ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஆனால், மேலும் 3 வாரங்கள் கால அவகாசம் அளித்து, ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 600 ஊழியர்களுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை TTC நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், இதுவரை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்களை ஒப்படைக்காத ஊழியர்களை ஊதியமற்றவர்கள் பட்டியலில் சேர்க்க இருப்பதாகவும், டிசம்பர் 31ம் திகதிக்கு பின்னர் அவர்கள் வேலை பறிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஊழியர்கள் மீது இவ்வாறான கடும் நடவடிக்கை மேற்கொள்வது என்பது வருந்தத்தக்க செயல் என்றே TTC தெரிவித்துள்ளது. சமூகத்திற்கு மிகவும் அத்தியாவசியமான சேவையை TTC மேற்கொண்டு வருகிறது.
இதனால் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கடமை எனவும் நிர்வாகிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. செயற்பாட்டில் உள்ள 15,061 ஊழியர்களில் 85 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக TTC நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் 2,000கும் அதிகமான ஊழியர்கள் இதுவரை தடுப்பூசி தொடர்பில் தங்கள் நிலை குறித்து வெளிப்படுத்தவில்லை எனவும், நவம்பர் 21ம் திகதிக்கு பின்னர் இவர்கள் அனைவரும் ஊதியமற்ற விடுப்புக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் TTC நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், சமீபத்தில் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், வேலை நேரத்தை அதிகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை TTC முன்னெடுக்கலாம் என்றே தெரிய வந்துள்ளது.
ஆனால் TTC நிர்வாகத்தின் இந்த கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.