ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது பயங்கரவாத தாக்குதல்
ஈரானின் ஜஹேதானில் உள்ள நீதித்துறை கட்டடத்தின் மீது ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாதிகள் திடீரென சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே எட்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
நீதிபதிகளின் அறைக்குள் துப்பாக்கிதாரிகள்
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நீதிமன்றத்தைச் சுற்றி துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நீதித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய ஜாஹேதானில் உள்ள நீதித்துறை வளாகத்திற்குள் உள்ள நீதிபதிகளின் அறைக்குள் துப்பாக்கிதாரிகள் நுழைந்தனர். அவர்கள் சரமாரி தாக்குதல் நடத்தியதில் நீதிபதிகள் 13 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை ஈரான் அதிகாரிகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இது தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாதச் செயல். விசாரணைகள் நடந்து வருகின்றன, மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.