கொரோனா தடுப்பூசி 6 மாதங்களுக்கு ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டுமா? WHO வெளியிட்ட தகவல்
கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் தேவையா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டி இருக்கலாம்.
இந்த தகவலை அளித்த, உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகம் முழுவதும் இது பற்றிய ஆராய்ச்சி நடந்து வருவதாகக் கூறியது.
இந்த ஆராய்ச்சிகள் முடிவடைய சுமார் 1 வருடம் ஆகலாம் என்று கூறப்பட்டுள்ளது. COVID-19 இன் பூஸ்டர் டோஸ் எவ்வளவு முக்கியமானது என்பது அப்போதுதான் தெளிவாகத் தெரியும்.
தடுப்பூசியின் செயல்திறன் 6 மாதங்களுக்கு நீடிக்கும்
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தடுப்பூசியின் (Vaccination) செயல்திறன் 6 மாதங்களுக்கு நீடிக்கும். இந்த தடுப்பூசி பல ஆண்டுகளுக்கு நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இது குறித்து இன்னும் கூடுதலான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
தடுப்பூசி வைரஸிலிருந்து 100% பாதுகாப்பை வழங்க முடியாது என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், 'பூஸ்டர் டோஸ் குறித்த ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. பூஸ்டர் டோஸ் தேவைப்படும் என்றால், அதைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
அமெரிக்க விஞ்ஞானியின் அறிக்கைக்கு பின்னர் இந்த சர்ச்சை தொடங்கியது
கொரோனா வைரஸ் (Coronavirus) தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் ஷாட் தேவைப்படக்கூடும் என்று அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபவுசி கூறியபிறகு இந்த விவாதம் தொடங்கியது. ஃபவுசி, 'தடுப்பூசியிலிருந்து நமக்கு எல்லையற்ற காலத்திற்கு பாதுகாப்பு கிடைக்கலாம் என எனக்குத் தோன்றவில்லை. அப்படி நடக்காது.
ஆகையால் நமக்கு பூஸ்டர் ஷாட் தேவைப்படும் என்று நான் நினைக்ககிறேன். தடுப்பூசி போட்ட பிறகு எத்தனை காலம் கழித்து பூஸ்டர் ஷாட் அளிகப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்" என்று கூறினார்.
பாரத் பயோடெக் பூஸ்டர் டோஸின் சோதனையைத் தொடங்கியது
இந்த நாட்களில் கொரோனா தொற்றின் பல வித மாறுபாடுகள் வந்துகொண்டு இருக்கின்றன. இவை வேகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில் பழைய டோஸ்களால் உருவாகும் ஆண்டிபாடிக்கள் வேலை செய்யாமல் போகும் நிலை ஏற்படலாம். அந்த வேளையில் பிறழ்ந்த வைரஸை கட்டுப்படுத்த ஒரு பூஸ்டர் டோஸ் தேவைப்படுகிறது.
இதன் காரணமாக, கோவாசினின் மூன்றாவது பூஸ்டர் டோஸ் மீதான பரிசோதனையை பாரத் பயோடெக் (Bharat Biotech) செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. இந்த சோதனையில், ஒரு பூஸ்டர் டோஸ் கொண்டு பல ஆண்டுகளுக்கு நீட்டித்த நோயெதிர்ப்பை உருவாக்க முடியுமா என்று சோதிக்கப்படும்.