உயர் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு; சீன மருந்துகளுக்கு தடைவிதித்த கிம்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில், சீனா மருந்துகளை பயன்படுத்த தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் இருந்தாலும், தங்கள் நாட்டில் கொரோனா இல்லை என வடகொரியா கூறி வருகிறது. எனினும் , ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சீனாவிற்கு அருகில் இருக்கும் வடகொரியாவில் எப்படி கொரோனா பரவல் இல்லாமல் இருக்கும், அந்த நாடு உண்மையை மறைப்பதாக கூறி வருகின்றனர்.
இதனால் எப்போதும் போல் வடகொரியா கொரோனா விஷயத்திலும், ஒரு மர்மம் நிறைந்த நாடாகவே இருக்கிறது. இந்நிலையில், வடகொரியாவில் உயர் அதிகாரி ஒருவர் சீனா மருந்தை பயன்படுத்தி வந்த நிலையில், திடீரென்று உயிரிழந்துள்ளார். இதனால் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இதைக் கேட்டு கோபமடைந்து சீனாவின் அனைத்து மருந்துகளும் தலைநகரான Pyongyang-ல் பயன்படுத்த தடை விதித்துள்ளார். பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, நாட்டின் உயர்மட்ட அதிகாரி இந்த மாதத்தின் துவக்கத்தில், உயிரிழப்பதற்கு முன்பு cocarboxylase ஊசி கொடுக்கப்பட்டது.
இந்த ஊசி பொதுவாக சோர்வுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது, ஆனால் சில சமயங்களில் வட கொரியாவில் உடல்நிலை சரியில்லாத அனைத்தையும் குணப்படுத்தவும் இந்த ஊசி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. 60 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி, கிம் ஜாங் உன்னிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனால் கடும் கோபமடைந்த கிம் ஜாங் உன், சீனாவின் கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்து சீன மருத்துகளுக்கும் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.